புதுடெல்லி : பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவனை ஏற்றிக் கொண்டு தலைநகர் டெல்லி சென்ற விமானம் பரிதாபாத் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் டாக்டர்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் காயமடைந்தனர். பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ராகுல்ராஜ் (17). பிளஸ் 2 படித்து வந்தான். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ராகுல், அங்குள்ள ஜெகதீஷ் நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான்.
அவன் கோமா நிலைக்கு சென்றதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டான். மேல் சிகிச்சைக்காக மாணவனை டெல்லி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக டெல்லியில் உள்ள 'ஏர் சார்ட்டர்டு சர்வீசஸ் இந்தியா' என்ற நிறுவனத்தின் குட்டி ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று வாடகைக்கு நேற்றிரவு வரவழைக்கப்பட்டது. அந்த பிசி-12 ரக குட்டி விமானத்தில் ஒரேயொரு இன்ஜின் மட்டுமே இருக்கும்.
விமானத்தில் இரண்டு டாக்டர்களும் பாட்னா வந்தனர். ராகுலுடன் அவனது உறவினர் ரத்தேஷ்குமார், டாக்டர்கள் ராஜேஷ், அர்ஷாத், பைலட் ஹர்பிரீத், துணை பைலட் மன்பிரீத் கட்டாரியா, ஆண் நர்ஸ் சிரில் ஆகிய 7 பேருடன் விமானம் பாட்னாவில் இருந்து புறப்பட்டு சென்றது. டெல்லி அருகே பரிதாபாத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் 11 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தது.
அப்போது தரையிறங்க தயாராகுமாறு பைலட்டுக்கு விமான கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விமானத்தை கீழே இறக்க முயன்றபோது, 8 ஆயிரம் அடி உயரத்தில் பலத்த காற்று வீசியது. இதில் நிலை குலைந்த விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து பரிதாபாத்தின் பர்வதியா காலனி குடியிருப்பு பகுதியில் உள்ள இரண்டடுக்கு வீட்டின் மீது மோதி நொறுங்கியது. இரு துண்டுகளாக உடைந்த விமானத்தின் பின் பகுதி வீட்டின் மாடியிலும், முன் பகுதி அருகில் உள்ள குறுகலான தெருவிலும் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
விமானத்தில் பயணம் செய்த 7 பேரும், விமானம் மோதிய வீட்டில் இருந்த 3 பெண்களும் இந்த விபத்தில் பலியாயினர். விமானம் மோதிய வீட்டில் மொத்தம் 10 பேர் இருந்துள்ளனர். இதில் வீட்டு உரிமையாளரின் மனைவி, மகள், மருமகள் ஆகிய 3 பேரும் பலியாயினர். 4 பேர் காயம் அடைந்தனர். வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது மகன் காயமின்றி தப்பினர்.
விமானம் தீப்பிடித்ததில் அங்கிருந்த சில வீடுகளுக்கும் தீ பரவியது. இதனால் மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறினர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்களும் மீட்புப் படையினரும் விரைந்து வந்தனர். அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் 2005ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து விமான கட்டுப்பாட்டு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், " ஒற்றை இன்ஜின் விமானத்தை பலத்த காற்று வீசும்போது இயக்குவது சிக்கலானது. விமானத்தின் வால் பகுதியை நோக்கி காற்று வீசினால், விமானத்தை நிலைகுலைய செய்து தலைகீழாக கவிழ்த்துவிடும்" என்றார்.

No comments:
Post a Comment