புதுதில்லி, மே.24: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை கொலைசெய்ய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்தான் திட்டம் தீட்டினார் என கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்தார்.
ராஜிவ் காந்தியின் படுகொலைக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் பத்மநாதன் குறிப்பிட்டார்.
இதுகுறித்து சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: ராஜிவ்காந்தியை கொல்ல பிரபாகரன் திட்டம் தீட்டினாரா?
கேபி: அது பிரபாகரனால் நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்திய மக்களுக்கும், குறிப்பாக காந்தி குடும்பத்தினருக்கும் நான் கூறுவது என்னவென்றால் பிரபாகரன் தவறுக்காக நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். தயவுசெய்து எங்களை மன்னித்துவிடுங்கள். எங்கள் மக்கள் இப்போது சிக்கலில் உள்ளனர். மனிதர்களாக வாழ எங்களுக்கு உதவி செய்யுங்கள்.
கேள்வி: அரசியல்வாதிகளும், அரசியல்கட்சிகளும் தமிழ் மக்களை வன்முறைப் பாதைக்குள் தள்ளினார்களா?
கேபி: திராவிட நாடு வேண்டும் என பெரியார் விரும்பினார். அதாவது வடக்கில் இருந்து தமிழகம், கேரளா, ஆந்திராவை பிரிக்க வேண்டும் என்றார். இந்த கொள்கையுடன் அவர் அமைப்பைத் தொடங்கினார். அதில் இருந்து அண்ணாதுரையும், கருணாநிதியும் வந்தனர். திராவிட நாடு கோரிக்கை தோல்வி அடைந்தது. அந்த கொள்கையை பிரபாகரனுக்கு அவர்கள் தெரிவித்தனர். பிராமணர்களுக்கு எதிரான கொள்கைகளால் பிரபாகரனை அவர்கள் கவர்ந்தனர். அந்த கொள்கைகளினால்தான் பிரபாகரன் அனைத்து தவறுகளையும்(ராஜிவ்காந்தி படுகொலை உள்ளிட்ட) செய்தார்.
கேள்வி: திமுக எப்படி விடுதலைப்புலிகளை ஆதரித்தது?
கேபி: வைகோ முன்பு திமுகவில் இருந்தார். திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சிலர் எங்களுடன் நெருக்கமாக இருந்தனர். கருணாநிதி ஒரு மூத்த அரசியல்வாதி. ஆனால் அவரும் விடுதலைப்புலிகளை அவ்வப்போது பயன்படுத்திக்கொண்டார்.

No comments:
Post a Comment